Sunday, June 24, 2012

Today is Kannadasan's Birthday !!

An Article from 1965 which was published on Vikatan magazine about the great Tamil Poet Kannadasan..


To read more about Kannadasan visit http://kkalyan.tripod.com/kndsn.html/


''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்!''




புதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.

அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.

இப்போது அவர் பெயர் முத்தையா அல்ல; கண்ணதாசன்.

ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித்தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.

''பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் 'டெஸ்பாட்சிங் பாயா'கப் பணியாற்றி வந்தேன். வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் 'நிலவொளியிலே' என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.

அஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான். பட்டினத்தார் சமாதியில் போய் உட்கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்கமும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித்தேன். பின்னர் சென்னைக்கு வந்து 'திரை ஒலி' என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய 'சண்டமாருதம்' பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக்கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.''

இன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

''நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது?''

''டைரக்டர் ராம்நாத். அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் 'கன்னியின் காதலி'யில் ஆறு பாட்டு என்னுடையது. 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பதுதான் என் முதல் பாட்டு!''

'கண்ணதாசன்' பஸ்ஸில் பிறந்தவர். ஆமாம்! திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.

''வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது. கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட்டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது? அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா? அந்தக் காலத்தில் பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதிதாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்! கண்ண தாசன் பிறந்துவிட்டான்.''

கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலையிலிருந்தே திரைப்படத்துக் குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், 'இல்லற ஜோதி'.

1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், 'தென்றல்' பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.

அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் 'மாலையிட்ட மங்கை' நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.

''இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி; இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!'' என்கிறார் கண்ணதாசன்.

இவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு - 'போனால் போகட்டும் போடா!'

(விகடன் - 30.05.1965)